எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Apr 26, 2011

பெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு?



சட்டம் ஒழுங்கை பாராமரிப்பது தான் காவல் துறையின்  வேலை. ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மக்கள் பாதுகாப்பாக வாழவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதுமே காவல் துறையின் தலையாய கடமை ஆகும். சட்டம் ஒழுங்கிற்கு  எங்காவது பாதிப்பு ஏற்படுகிறது என்றால் உடனடியாக பொது மக்கள் தொடர்பு கொள்ளும்படி மக்களின் நண்பர்களாக காவல் துறை இருக்க வேண்டும்.அவ்வாறு காவல் துறை பாரமரிக்கபடவேண்டியது ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமை ஆகும் (welfare state ).
அப்படி திறமையாகவும் நேர்மையுடனும் காவல் துறை செயல்படுமானால் இங்கு தேவைக்கு மீறி ஆற்றில்  மணல் எடுப்பது, கனிம வளங்களை விதிகளை மீறி சுரண்டுவது, பொது சொத்துகளை ஆக்கிரமித்து கொள்வது, தொழிலாளர்  உரிமைகள் பறிக்கப்படுவது ,  பணத்திற்காக கொலை செய்வது , திருட்டு , கொள்ளை , பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை போன்ற அனைத்தும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு ஒரு நல்லாட்சி நடைபெறும் என்று உறுதியாக கூறலாம்.
ஆனால் அவ்வாறு காவல் துறை நேர்மையாக செயல்பட சட்டத்தின் அனைத்து பொந்துகளிலும் புகுந்து வந்து பல கிரிமினல் வேலை செய்து சொத்து சேர்க்கும் பண முதலைகளும், அதில் கூட்டுவாங்கி கொள்வதோடு  லஞ்சம் ,கட்டப்பஞ்யத்து செய்வது, நில ஆக்கிரமிப்பு செய்வது, ஊழல் செய்து பெரும் பொருளீட்டுவது  போன்றவற்றை செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் எவ்விதம் இவ்வாறு காவல் துறை நேர்மையாக செயல்பட அனுமதிப்பார்கள். தப்பி தவறி எதாவது ஒரு அதிகாரி நேர்மையானவராக வந்து விட்டால் அவரை தங்களது சகல செல்வாக்கையும், அதிகாரங்களையும் பிரயோகித்து பந்தாடிவிடுவார்கள் இந்த ஊழல் அரசியல்வாதிகள்.  

ஆதிகால சமுதாயத்தில் பெண்கள் சமஉரிமையுடன் வாழ்ந்தார்கள் அதற்கு பிறகு பெண்கள் படிப்படியாக சமூக உறபத்தியில் நேரடியாக பங்குபெற விடாமல் வீட்டுவேலை செய்யும் அடிமையாக்கப்பட்டு சம உரிமை மறுக்கப்பட்டு போகபோருளாக மாற்றப்பட்டார்கள் . இன்று அந்த நிலை இல்லை என்றாலும் அதன் மிச்ச சொச்சம் இருக்கவே செய்கிறது இன்று பாதிக்கு மேற்பட்ட பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகவே  இருக்கின்றனர் , இவ்வாறு அவர்கள் தொழிலாளர்களானாலும் , அதிக நேரம் வேலை செய்தபோதும் , அவர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் என்பது  இன்னும்  கானல் நீராகவே உள்ளது.  வேலைக்கு செல்லும் ஆண்களை விட பெண்களுக்கு பல இன்னல்கள் இழைக்கப்படுகின்றன. மேலதிகாரிகள் பெண்களை ஒரு போக பொருளாகவே நினைத்து அவர்களை பலவாறு தொல்லைகளுக்கு உள்ளாக்குகிறார்கள். அதை சகித்து கொள்ளாது எதிர்த்து கேட்கும் மகளீரை பல கடினமான வேலை கொடுத்து தங்களின் கோபத்தை காட்டுகின்றனர்.

காவல் துறையில் கீழ்நிலையில் உள்ள காவலர்களை மேலதிகாரிகள் மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள். அவர்கள் எவ்வளவு வயதானவர்களாக இருந்தபோதும்  ஒருமையில் அழைப்பதும், சுடுசொற்களால் திட்டுவதும் , அவர்களை மேலதிகாரிகளின் வீட்டில் வீட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்துவதும், அதற்கு பணியாதவர்களை சிறு சிறு குற்றங்கள்  கண்டுபிடித்து அதுக்கு கடினமான தண்டனை தருவதும், பணி மாற்றம் செய்வதும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. கீழ் நிலையில் பணி செய்யும் காவலர்களுக்கு பணி நேரம் என்ற ஓன்று இருப்பதில்லை,அநீதிகளை தட்டி கேட்க முடியாது, என்பது போன்ற மோசமான சூழ்நிலையில் அவர்கள் மேலதிகாரிகளுக்கு சலாம் போடுவதும்,  முடிந்த அளவு மாமுல் வசூல் செய்வதும் , ரவுடிகளோடு கூட்டுசேர்ந்து கொண்டு அவர்களுக்கு இன்பார்மராக செயல்படுவதும் இவர்கள் வாங்கும் லஞ்சத்தில் மேலதிகாரிகளுக்கு ஒரு பகுதியை கொடுப்பதும், உரிமைகளுக்காக போராடுபவர்களை எந்த வித சட்ட விதிகளையும் பார்க்காமல் எங்கெல்லாம் அடிக்க கூடாது என்று விதிகள் இருகின்றதோ அங்கு தான் முதலில் அடிப்பதும் ,விபசாரம் , கள்ளசாராயம் காட்சுபவர்களுக்கு துனைபோவதுமான மோசமான ஒட்டுமொத்த சமுக அக்கறையற்றவர்களாக ஆக்கும் பணியை காவல் துறை மேலதிகாரிகளே  உருவாக்குகிறார்கள்.அப்படியும் சில நல்ல காவலர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கு மேற்சொன்னபடியே கடினமான வேலைகள் தருவதும் , இடமாற்றல் செய்வதும் தான் நடைபெறும் என்பது எழுதபடாத விதியாகும். 

ஆண்  காவலர்களின் நிலையே இப்படி இருக்கும்போது பெண்காவலர்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்பது சொல்லி தெரிய  வேண்டியதில்லை. மகளீர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக புகார் கொடுக்க பெண்கள் காவல் நிலையம் வரதயங்குவார்கள் என்பதால் தான் மகளிருக்கு என்று தனி காவல் நிலையம் உருவாக்கப்பட்டு பெண்காவலர்கள் அதிக அளவில் பணியமர்த்தபட்டார்கள். இருந்தபோதும் பொதுவாக மேலதிகாரிகளாக இருப்பவர்கள் பெருமளவில் ஆண்களாகவே இருக்கின்றனர். அதுவும் காவல் துறையில் கீழ்படிதல் என்பது மிகமுக்கியமான கடமையாக இருப்பதாலும் ,இரவு நேர ட்யூட்டி , முகாமில் பயிற்சி , போன்ற அனைத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். .அதுவும் இது போன்ற வேலைக்கு வரும் பெண்கள் அனைவரும் வறுமையான சூழ்நிலையில் எதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என்றே வருகின்றனர். அவர்களின் வருவாயை நம்பித்தான் அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கும் என்ற சூழ்நிலையில் இது போன்ற தொந்தரவுகளை அவர்கள் சகித்து கொள்ளவே செய்கின்றனர். வேலைநீக்கம் செய்யப்பட்டால் உடனடியாக நீதிமன்றம் சென்று வேலைக்கு சேர்வது என்பதுவும் குதிரைகொம்பே. பணம் செலவு செய்து நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு வசதியும் இறக்காது என்பது போன்ற அனைத்து சாதகமான சூழ்நிலைகளும் பெண் காவலர்களுக்கு எதிராக அவர்களை தொடர்ந்து இது போல செயல் பட வைக்கிறது என்றால் அது மிகை அல்ல. 

தங்களுக்கு பணிந்து போகும் பெண்காவலர்களுக்கு சலுகைகள் கொடுப்பதும், உடன்படமறுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதும் என்ற சூழ்நிலையில் அவர்களுக்கு மாறாத மன உழைச்சலை தருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து வெளி வரும் காவலர்கள் சமுக பிரஞ்கை அற்றவர்களாக மாறிபோய் விடுகின்றனர். அதனால் அவர்கள் உயர்பதவிக்கு வரும் போதும் இது போன்ற  இளநிலை காவலர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டும் காணாததும் போல இருந்து விடுகின்றனர். இந்த சமுகமே பணத்தால் தான் இயங்கிறது என்பதால் பணம் படைத்தவர்களுக்கு உடனடியாக ஒடி சென்று உதவிகள் செய்வதும் ஏழைகளை கண்டாலே வெறுத்து ஒதுக்குவதுமான நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.அத்தொடு காவல்துறை என்பதே இப்படி தான் இருக்கும், இங்கு இவ்வாறு நடந்து கொண்டால் தான் நீடிக்க முடியும் என்ற மனநிலை அனைத்து காவல் துறையினிடத்திலும்  ஆழமாக பதிந்து விடுகிறது. சட்டம் என்ன சொல்கிறது என்று பார்க்காமல் அரசு என்ன சொல்கிறதோ அதை ஏவல் நாய்களை போல ஏற்று செயல்படுகின்றார். சமூக  அநீதிகளை எதிர்த்து  போராடுபவர்களை ஒடுக்குவதொடு அவர்கள் மீது பொய் வழக்குகளை பாய்ச்சி சிறையில் தள்ளுகின்றனர். யார் நியாயவான் என்று பார்க்காமல் யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக எப்.ஐ.ஆர்கள் போடப்படுகிறது, கொலைவழக்குகளில் இருந்து பணம் படைத்தவர்களை தப்பிக்க வைக்கின்றனர். அனைத்து  விதமான தீமைகளின் ஒதுக்கிடமாகவும் ,அரசின் ஒடுக்கு முறை கருவியாகவும் காவல் துறை திகழ்கிறது. 

இது போன்ற கையறுநிலையில் பென்காவலர்களில் ஒருவர் 1997 ல் விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட  உத்தரவான  வட்ட ,சரக ,மாவட்ட ,மற்றும் உயர்மட்ட  அளவில் பாலியல் குற்றசாட்டுக்கு எதிராக குற்ற முறையீட்டு குழு அமைக்கப்படவேண்டும்  என்ற உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கோரி ஒரு பொது நல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தையிரியமாக தாக்கல் செய்துள்ளார். அத்தோடு தனக்கு தனிப்பட்ட முறையில் இழைக்கப்பட்டுள்ள துன்புறுத்தல்களை சீலிட்ட உரையில் வைத்து தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு குடும்ப வறுமையை காரணம் காட்டி பெண்காவலர்கள் மீது இளைக்கபட்டு வந்த கொடுமைகளை எதிர்த்து ஒரு பெண்காவலர் சென்னை உயர்  நீதிமன்றத்தில் முதல் போரட்டத்தை துவங்கி உள்ளார். அவருக்கும் ,அவரை போன்ற பெண்காவலர்களுக்கும் ஆதரவு கொடுக்கவேண்டியதும் , அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள , தொடர்ந்து இளைக்கப்பட்டு கொண்டிருக்கின்ற வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியதும் அவர்களின் நியாயமான உரிமைகள் மேலதிகாரிகளால் வரைமுறை இல்லாமல் பரிக்கப்படுவதை எதிர்த்து போராடவேண்டியதும்   நமது வரலாற்று கடமையாகும்.
தொடர்பிற்கு
கு.கதிரேசன்
9843464246
advkathiresan@gmail.com

1 comment:

  1. // சட்டம் ஒழுங்கை பாராமரிப்பது தான் காவல் துறையின் வேலை. ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மக்கள் பாதுகாப்பாக வாழவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதுமே காவல் துறையின் தலையாய கடமை ஆகும்.// என்பது அப்பாவி நடுத்தர மக்கள் மத்தியில் நிலவும் காவல்துறை பற்றிய தப்பான அபிப்ராயம். அதுதான் "இயக்கம்" கொண்டிருக்கும் அபிப்ராயமும் என்றால் அது எப்படி முற்போக்காகும். சட்டம் ஒழுங்கை பாராமரிக்கிறோம் என்ற பெயரில்தான் தங்கள் உரிமைக்காகப் போராடும் மக்களை இந்தக் காவல்துறை அடக்கி ஒடுக்குகிறது என்பதை எப்படி மறைக்க முடியும்.
    அரசு என்பது ஓர் ஒடுக்குமுறைக் கருவி; அரசு என்றாலே ராணுவமும் காவல்துறையும்தான். அரசுக்கெதிராகப் போராடும் பெண்களை ஆண் காவலர்களைக் கொண்டு அப்புறப் படுத்தும்போது காவல்துறை பல அத்துமீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதால், போராடும் பெண்களை பெண் காவலர்களைக் கொண்டே ஒடுக்குவதற்காகத்தான் பெண் காவலர்கள் பணியில் சேர்க்கப் பட்டனர்.
    சமூக மாற்றம் விரும்புபவர்கள், ஒடுக்குமுறைக் கருவியான காவல்துறை எவ்வளவு ஒழுக்கக் கேடாக உள்ளது என்றும் அங்கிருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது மக்களுக்கு அதனிடமிருந்து எப்படிப் பாதுகாப்புக் கிடைக்கும் என்றும் காவல்துறையின் லட்சணத்தை மக்களிடம் அம்பலப்படுத்தலாமே தவிர, காவல்துறையினரின் உரிமைக்காகக் குரல் கொடுக்க முடியுமா?
    தனிப்பட்ட காவலர்களில் நல்லவர்கள் இருக்கலாம்; ஆனாலும் அவர்கள் ஒரு ஒடுக்குமுறைக் கருவியின் அங்கமாக இருக்கும்வரை அவர்கள் நல்லவர்களாக‌ச் செயல்பட முடியாது. அவர்கள் வறுமையின் காரணமாக காவல்துறையில் சேர்ந்தவர்கள் என்று நாம் அனுதாபம் காட்டுவது சரியென்றால் வறுமையின் காரணமாக கொலை கொள்ளையில் ஈடுபடும் கூலிப்படையில் சேர்ந்தவர்கள் மீதும் நாம் அனுதாபம் காட்டலாமே. அவர்களை மட்டும் நாம் சமூக விரோதிகள் என்று சொல்கிறோம். இதற்கு சட்ட அங்கீகாரம் இருக்கிறது என்பது மட்டுமே அதை நியாயப்படுத்திவிடுமா?

    ReplyDelete