வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழை பிடித்தாலே நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகுப் பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களும், பாதாளச் சாக்கடைகளும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை. அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது. நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அதைத் தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை. நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.